.

Tuesday, October 26, 2010

சச்சின் – நம் காலத்து நாயகன்!





1930களில் லண்டன் செய்திதாள்களில் “He is Out” என்ற வரி தென்பட்டால் யாரோ ஒரு அதிர்ஷ்டசாலி பந்துவீச்சாளர் பிராட்மெனை அவுட் ஆக்கிவிட்டார் என்று மக்கள் புரிந்துகொள்வார்களாம். தொண்ணுறுகளிலும் இந்த நூற்றாண்டிலும் “Another ton for him” என்ற வரி எங்கு தென்பட்டாலும் மிகச்சுலபமாக புரிந்துகொள்ளமுடியும் சச்சின் மற்றொரு சதம் அடித்திருக்கிறாறென்று. இவ்வளவு சதங்களை குவிக்கிறாரே சதம் அடிப்பது மிக எளிதான செயலோ என்று கிரிக்கெட் தெரியாதவர்கள் தவறாக நினைக்கும் அளவிற்கு நூறு ரன்களை சச்சின் மிக எளிதாகவும் அழகாகவும் கடந்து நிற்பார். ஆனால் இதற்கு பின்னாலிருக்கும் உழைப்பும்,அர்ப்பணிப்பும் மிக அதிகம் என்பதை சச்சினை பற்றி தெரிந்தவர்கள் மட்டுமே புரிந்துகொள்வார்கள். கிரிக்கெட்டை மட்டுமே சுவாசமாக கொண்டு வாழ்பவர் சச்சின்.

93 முறை சர்வதேச போட்டிகளில் நூறு ரன்களை கடப்பதென்பது மிகக்கடினம். பல்வேறு மைதானங்கள்,பவுலர்கள்,பிட்சுகள்,சிதோஷ்ண நிலை இவை அனைத்தையும் தாண்டி தன் சாதனை பயணத்தை தொடர்கிறார். அவரது உடலில் காயங்கள் இல்லாத இடமே இல்லை எனலாம். டென்னிஸ் எல்போவால் பாதிக்கப்பட்டபோது இனி சச்சின் அவ்வளவுதான் என்றார்கள். பீனிக்ஸாக மீண்டு வந்தார்.
கிரிக்கெட் விளையாடும் சர்வதேச வீரர்கள் அனைவரும் எப்படியாவது உலகின் மிகச்சிறந்த "இரண்டாவது" டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்கிற இடத்துக்குத்தான் போட்டியிடுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு தெரியும் எப்பொழுதும் முதலிடம் ஒருவருக்குத்தான். அது டான் பிராட்மென். அவரது சராசரியை முறியடிக்க இன்றுவரை எவரும் பிறந்ததாக தெரியவில்லை. மிஸ்டர் கிரிக்கெட் என்று ஆஸி. வீரர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட மைக்கேல் ஹஸ்ஸி 80க்கும் மேல் சராசரியுடன் பிராட்மெனை எட்டிப்பிடிக்க ரன்கள் குவித்துகொண்டிருந்தார். உச்சிக்கு ஏறிய வேகத்தில் கீழே இறங்கி அமைதியாகிவிட்டார்.

ஒருநாள் போட்டியில் நம்பர் 1 வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் என்பதில் எவ்வித சந்தேகமும் எந்த வீரர்களுக்கும்,ரசிகர்களுக்கும் இல்லை. இன்று மேலும் ஒரு வைரம் அவரது கிரீடத்தில். 39 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியின் பெரும் ஜாம்பவான்களான ரிச்சர்ட்ஸ்,லாரா,கில்கிறிஸ்ட்,மார்க் வா,அன்வர்,ஹெயின்ஸ்,ஜெயசூர்யா,ங்குலி என எல்லோரின் கனவாகவும் இருந்து கடைசி வரை நிறைவேறாமல் போன 200 ரன்களை சச்சின் முதல் வீரனாக தொட்டிருக்கிறார்.மிகச்சிறந்த அணியான  தென்னாப்ரிக்காவுக்கு எதிராக என்பது கூடுதல் சாதனையாக கொள்ளலாம். ஸ்டெயினும்,பார்னலும் உசுப்பேற்றியபோதும் மெளனமாக இருந்தவர் அவரது மட்டையால் பதிலடி கொடுத்தார். காலீஸின் பந்துவீச்சில் வலது புறம் சென்று இடப்பக்கமாக அவர் அடித்த நான்கு ரன்களை இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பாடமாக வைக்கலாம். 194 ரன்கள் கடந்து உலகசாதனை செய்தபோதும் மட்டையை உயர்த்தாமல் அடுத்த பந்தை எதிர்கொள்ள நின்றாரே,போட்டி முடிந்தபின் இந்த இரட்டை சதத்தை இந்திய மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்என்றாரே. அதுதான் சச்சின்.
36 வயதில் சச்சின் அடிக்கும் மூன்றாவது மிகப்பெரிய சதம் இது(இதற்கு முன் 2009ல் நியுசிக்கு எதிராக 163*,ஆஸிக்கு எதிராக 175) ரன்னர் இல்லாமல் 200 ரன்கள். ஒரு நாள் போட்டிகளில் அதிக  பவுண்டரிகள்(25) என்று சச்சினின்  சாதனை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இன்றைய போட்டியில் எந்த வித தவறும் செய்யாமல் சச்சின் விளையாடியதை பார்த்தபோது கைதேர்ந்த ஓவியனொருவன் மிகவேகமாகவும் நேர்த்தியாகவும் ஓவியம் தீட்டுவதை போலிருந்தது.
சிறிய வயதிலேயே தேசிய அணிக்கு விளையாட வந்துவிட்டதால் சச்சினால் அதிக உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கமுடியவில்லை. ஒருவேளை அப்படி பங்கேற்றிருந்தால் பல பந்துவீச்சாளர்களை இந்தியா இழந்திருக்கும். ஜிம்பாவே அணிக்கெதிரான போட்டி ஒன்றில் சச்சின் விக்கெட்டை எடுத்தவுடன் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து கும்மாளமிட்டார் ஒலாங்கோ. அடுத்த போட்டியில் அவரது பந்துவீச்சை சச்சின் அடித்த அடியில் ஒலாங்கோ அணியை விட்டே போனார்.
2002ல் சேவாக் புகழின் உச்சியில் இருந்த சமயம். இந்தியாவுக்கு எப்படியும் 2003 உலககோப்பையை அவர் வாங்கித் தந்துவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தபோது பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. அந்த உலக கோப்பை போட்டிகள் அனைத்திலும் சேவாக் சோபிக்கவில்லை. உலககோப்பைக்கு முன்புவரை அமைதியாக இருந்த சச்சின் ஒவ்வொரு போட்டியிலும் ருத்ர தாண்டவமாடினார். இங்கிலாந்து பந்துவீச்சாளர் வாயாடி கேடிக்கின் பந்தை மைதானத்திற்கு வெளியே அடித்து அதிர செய்தார். அதன் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சச்சின் அடித்த 98 ரன்களை சாகும் வரை பாகிஸ்தான் வீரர்கள் மறக்கமாட்டார்கள் குறிப்பாக அக்தர்.
முப்பது வயதுக்கு மேல்தான் கவாஸ்கர் பல சாதனைகளை குவித்தார்.ஓய்வு பெறும்வரை பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் ரிச்சர்ட்ஸ். தங்களது கடைசி நாட்களிலும் ரன்களை குவித்தவர்கள் பார்டரும்,ஸ்டீவ் வாக்கும். கடந்த இரண்டு வருடங்களில் சச்சினின் சராசரியும் சதங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இது சச்சினின் “Golden days” என்கிறார்கள் விமர்சகர்கள். அவர் ஓய்வு பெறும் வரை பந்துவீச்சாளர்களின் பாடு திண்டாட்டம்தான். அவரும் ஒரு நாள் ஓய்வு பெற்றுவிடுவார் என்பதை நினைக்கும்போது விழியோரம் நீர்த்துளிர்க்கிறது. நம் காலத்தின் மகத்தான நாயகன் சச்சின். அவர் வாழ்ந்த காலத்திலேயே நாமும் வாழ்ந்தோம் என்பதே பெருமைதானே.
பிராட்மென் விளையாடுவதை நேரில் பார்த்ததை தங்களது வாழ்நாளின் பொக்கிஷமாக கருதியவர்கள் உண்டு. அதேபோல் நாம் சச்சின் எனும் மாபெரும் கலைஞனை சாதனையின் சிகரங்களில் அவன் ஏறியபோது உடனிருந்து பார்த்து மகிழ்ந்திருந்தோம் என்பது எவ்வளவு அற்புதமான விஷயம். இன்னும் நாற்பது ஆண்டுகள் ஆனாலும் கிரிக்கெட் என்னும் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் சச்சின் என்கிற பெயர் எழுதப்படாமல் இருக்காது. கார்ரேஸுக்கு ஒரு ஷுமேக்கர்,டென்னிஸுக்கு ஒரு பெடரர்,கிரிக்கெட்டிற்கு ஒரு சச்சின்.விரைவில் சர் பட்டம் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சச்சினிடம் இனியும் எதிர்பார்க்க என்ன இருக்கிறது? இரண்டு விஷயங்கள் இன்னும் மிச்சம் இருக்கின்றன. ஒன்று, டெஸ்ட் போட்டியில் இதுவரை சச்சின் 300 ரன்கள் அடித்ததில்லை. இரண்டு, இதுவரை எத்தனையோ கோப்பைகளையும் பதக்கங்களையும் ஸ்பரிசித்த சச்சினின்  கரங்கள் உலககோப்பையை ஸ்பரிசித்ததில்லை. இந்த இரண்டும் விரைவில் நடக்கும் என்று நம்பிக்கையுடன் இந்த மிகச்சிறந்த வீரனை  நம் காலத்தின் நாயகனை வாழ்த்துவோம். 
படித்ததில் பிடித்த சச்சின் வாசகம்:

"
Beneath the helmet, under that unruly curly hair, inside the cranium, there is something we don't know, something beyond scientific measure. Something that allows him to soar, to roam a territory of sport that, forget us, even those who are gifted enough to play alongside him cannot even fathom. When he goes out to bat, people switch on their television sets and switch off their lives."
- BBC Sports, on Sachin Tendulkar